திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 556 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் அறிவு நகரத்தை அமைக்கலாம்: இல்லையெனில் வேறு நகருக்கு மாற்ற அன்புமணி வலியுறுத்தல்

2 months ago 8

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 556 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் தமிழ்நாடு அறிவு நகரத்தை அமைக்கலாம், இல்லாவிட்டால் அதை வேறு நகருக்கு மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையை அடுத்த திருவள்ளூர், ஊத்துக்கோட்டை வட்டங்களில் 1703 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இப்போது அறிவுநகரம் அமைக்கப்படும் நிலப்பரப்பு 870 ஏக்கராக குறைக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு சற்று நிம்மதியளிக்கும் விஷயம்தான்.

மொத்தம் 1703 ஏக்கர் நிலப்பரப்பில் அறிவுசார் நகரம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்காக ஊத்துகோட்டை வட்டத்திலுள்ள கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், திருவள்ளூர் வட்டத்திலுள்ள வெங்கல் ஆகிய கிராமங்களில் நில எடுப்பு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. அப்பகுதியில் 556 ஏக்கர் அரசு புறப்போக்கு நிலங்கள் இருக்கும் நிலையில், அதையும், விவசாயிகளுக்கு சொந்தமான 1146 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களையும் கையகப்படுத்த அரசு தீர்மானித்தது.

தமிழக அரசின் முடிவுக்கு கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதமே நான் கடும் கண்டனம் தெரிவித்தேன். இப்போது அப்பரப்பை 870 ஏக்கராகக் குறைத்திருக்கிறது. தமிழ்நாடு அறிவு நகரம் அமைப்பதையும், அங்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வளாகங்களை ஏற்படுத்துவதையும் பாமக எப்போதும் ஆதரிக்கிறது. அதேநேரம் எந்த ஒரு திட்டத்திற்காகவும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படக் கூடாது. தமிழக அரசு விரும்பினால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 556 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் அறிவு நகரத்தை அமைக்கலாம்.

அது சாத்தியமில்லை என்றால், திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக சேலம் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் சேலம் இரும்பாலைக்குச் சொந்தமான 4,000 ஏக்கர் நிலத்திலோ, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் அரசுக்குச் சொந்தமாக உள்ள நிலங்களிலோ இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 556 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் அறிவு நகரத்தை அமைக்கலாம்: இல்லையெனில் வேறு நகருக்கு மாற்ற அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article