அண்ணாநகர்: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளித்த நிலையில் சென்னை அண்ணா நகர் காவல் மாவட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக அண்ணா நகர் மது விலக்கு உதவி ஆணையருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து, உதவி ஆணையர் சங்கு தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு மாறுவேடத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, கொடுங்கையூர் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 80 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பிறகு வியாசர்பாடி சர்மா நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (30), திருமுருகன் (56) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
The post திருவள்ளுவர் தினத்தில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.