திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் தொடங்கிய பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். திருவனந்தபுரத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 9ம் நாளான இன்று பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபட்டனர். ,ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைத்து தரப்பு பெண்களும் ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு பொங்கல் வைத்து படைத்த இந்த நிகழ்ச்சியால் திருவனந்தபுரம் நகரம் விழா கோலம் பூண்டது. மேலும், உலகளவில் சிறப்பு வாய்ந்த இந்த விழாவுக்காக திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி இருப்பதால் 3,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
The post திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று வழிபாடு!! appeared first on Dinakaran.