திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியொட்டி 2வது நாளாக இன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதனால் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 7.51 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 8.16 மணிக்கு நிறைவடைகிறது. நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். இரவு 7 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோயில், இடுக்குப்பிள்ளையார் கோயில்களை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பவுர்ணமி இன்றிரவு 8.16 வரை நீடிப்பதால் 2வது நாளாக இன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. பொது தரிசனம் மட்டும் ராஜ கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் மாட வீதி வரை அதிகரித்திருப்பதால், தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இந்த பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் நேற்று மாலை முதல் செயல்பட்டன. திருவண்ணாமலை நகருக்குள் சுற்றுலா கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கவில்லை. வேலூர் கன்டோன்மென்ட் வழியாக சென்னை பீச் ஸ்டேஷன் வரையும் விழுப்புரம் வழியாக தாம்பரம் வரையும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. சிறப்பு ரயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
The post திருவண்ணாமலை கோயிலில் 2வது நாளாக பல்லாயிரம் பேர் கிரிவலம்: தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருப்பு appeared first on Dinakaran.