
திருவண்ணாமலை,
வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மதியம் 12.32 மணியளவில் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். இரவில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. மேலும் கோவிலிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று மதியம் 1.58 மணி வரை பவுர்ணமி நீடித்ததால் பக்தர்கள் நேற்று விடிய, விடிய கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் 2-வது நாளாக நேற்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட பொது தரிசனம் வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வரிசையானது கோவில் அருகில் இருந்து தேரடி வீதி வழியாக சென்று பெரிய தெரு வரையில் நீண்டு காணப்பட்டது. பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 6 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நேற்று இரவு வரை பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர். கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் தங்கள் பகுதிகளுக்கு திரும்பி செல்வதற்காக பஸ்களிலும், ரெயிலிலும் அமர்ந்து செல்லும் வகையில் இடம் பிடிப்பதற்காக ஒருவரை ஒருவர் முண்டியடித்த படி ஏறினர். இதனால் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.