
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் அமைந்துள்ளது, சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில். மூலவர் ஆறு அடியில் ஐம்பொன்னில் வஜ்ரவேலாக அமைந்து வணங்கப்படுவது இத்தலத்தின் சிறப்பாகும். இந்த கோவில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத பூவனநாத சுவாமி ஆலயத்துடன் இணைந்த கோவில் ஆகும். இங்கு சிலைக்கு பதிலாக முருகனின் வேலையே மூலவராக, முருகன் சிலை போல் அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள்.
தல புராணம்
கோவில்பட்டியில் இருந்து இலங்கைக்கு வணிகம் செய்யச் சென்ற முருகன் அடியவர் ஒருவர், இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகப்பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். கதிர்காமத்தில் வேல் வழிபாடே சிறப்பாக உள்ளது. ஆகவே கதிர்காமம் முருகனை நினைத்து, தானும் ஒரு வேல் வாங்கி வைத்து வழிபாடு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் இலங்கையில் இருந்து மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்ப நினைத்த அடியவருக்கு, கதிர்காமம் முருகப்பெருமானை பிரிவதை நினைத்து கவலையில் ஆழ்ந்தார்.
அவரது மனக்கவலையை போக்க எண்ணிய முருகப்பெருமான், அவர் வைத்திருந்த வேலுக்குள் தன்னை செலுத்தினார். பின்னர் அசரீரியாக, "அன்பனே! உன் பொருட்டு யாம் இந்த வேல் மூலம் உன் ஊருக்கு வருகிறேன். கதிர்காமத்தில் இருந்து பிடி மண் கொண்டு சென்று, அங்குள்ள மலைக் குன்றில் மூலவராக எமது இந்த திருக்கை வேல் வைத்து வழிபடு. உன் கவலை மட்டுமின்றி, என்னை வழிபடும் பிற அடியவர்களின் கவலையையும் நான் அகற்றுவேன்" என்று கூறி அருளினார்.
கோவில்பட்டிக்கு அந்த கதிர்காம கந்தனின் திருக்கை வேலுடன் திரும்பிய அந்த முருக பக்தர், பின்னாளில் இலங்கை கதிர்காமம் முருகப்பெருமான் கூறியபடி மலைக்குன்றில் ஆலயம் எழுப்பினார். அந்த கதிர்காம முருகன் திருக்கை வேல் தான் இங்கு மூலவராக உள்ளது.
ஒவ்வொரு வேலும் ஒரு தனி மகிமையை கொண்டது.
வீரவேல் - காமம்
வெற்றிவேல் - குரோதம்
ஞானவேல் - லோபம்
வைரவேல் - கோபம்
சக்திவேல் - மதம்
சந்தான வேல் - மாச்சரியம்
என ஆறு வேல்களும் மனிதனின் ஆறு கெட்ட குணங்களை அகற்றும். இந்த ஆறு வேலும் சேர்ந்து ஒரே வேலாக சொர்ணமலை முருகன் கோவிலில் ஆறு அடி உயரத்தில் குடிகொண்டுள்ளது சிறப்பான அமைப்பாகும்.
இத்தலத்தில் மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் சன்னிதிகளும் மூன்று கோபுரங்களும், இரு சாலைக் கோபுரங்களும் உள்ளன.
கோவில் சிறப்புகள்
கார்த்திகை நட்சத்திர நாள் அன்று இந்த வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னப் பிரசாதத்தை குழந்தைப்பேறுக்காக வேண்டிக் கொள்ளும் பெண்கள் உட்கொண்டால், அடுத்த ஆண்டே குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மறு ஆண்டே குழந்தைப் பேறு கிடைக்கப் பெற்றவர்கள், தங்கள் குழந்தையோடு இத்தலம் வந்து முருகனுக்கு நன்றிக்கடன் செலுத்திச் செல்கிறார்கள். இங்குள்ள மலை 'கதிரேசன் மலை' என்றும் அழைக்கப்படுகிறது.
தொழில் முனைவோர்கள், செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து, வேலுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், தொழில் அபிவிருத்தி காணலாம். மேலும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணாதவர்கள் வெகுவிரைவில் வியாபாரத் தடை நீங்கி வியாபாரத்தில் அமோக லாபம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சொந்தத் தொழில் செய்ய முயற்சி செய்பவர்களுக்கு காலம் கைகூடி வரும். இதனால் இந்த மலையை 'சொர்ண மலை' என்றும் அழைக்கிறார்கள்.
கந்தசஷ்டி அன்று இந்த ஆலயத்திற்கு வந்து, 'சத்ரு சம்கார வேல்' என்ற பதிகத்தை ஆறு முறை பாராயணம் செய்து, மூலவரான கதிர்வேலை வழிபாடு செய்தால், பகை, பில்லி சூனியம், வறுமை, தரித்திரம், உடல் மற்றும் மன நோய்கள் அகலும் என்கிறார்கள். சஷ்டி, கிருத்திகை, விசாகம், பூசம் நட்சத்திர நாட்களில் இத்தலம் வந்து கதிர்வேலுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்கள் கொண்டு இத்தல மூலவர் கதிர்வேல், மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் ஆகியோருக்கு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து 8 மாதம் வழிபாடு செய்து வந்தால், நம் எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பார்த்தபடி வேலை வாய்ப்புகள் அமையும். குடும்பப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தீவினை, கர்மவினைகள் விலகும். இத்தலத்தில் வழிபட்டால் இலங்கை கதிர் காமம் முருகன் ஆலயத்தில் வழிபடுவதற்கு நிகரான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மாதந்தோறும் இங்கு சொர்ணமலையை சுற்றி கிரிவலம் நடக்கிறது. கிரிவலம் வரும் வழியில் 'ஒளி குகை' என்ற குகையின் வாசல் உள்ளது. அங்கு சித்தர்கள் பலர் தவம் இருந்து வருவதாகவும், இந்த குகையின் உள்ளே இருக்கும் ரகசிய சுரங்கப் பாதை வழியாக செண்பகவல்லி அம்மன் கோவிலை சென்று அடையலாம் என்றும் கூறுகிறார்கள். குகைக்குள் தவம் செய்யும் சித்தர்களின் தவத்தை கலைக்கக்கூடாது என்பதற்காக யாரும் அங்கு செல்வதில்லை.
திருக்கார்த்திகை தீப திருநாள் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய நாளில் சொர்ணமலை குன்றில் 'திருக்கார்த்திகை தீபம்' ஏற்றுகிறார்கள். பௌர்ணமி நாட்களில் கிரிவலம் சுற்றிவர ஏதுவாக சாலை வசதி அமைக்கப்பட்டது. இத்தலத்திற்கு படிகள் மூலமாகவும், பின்புற சாலையில் வாகனம் மூலமாகவும் செல்லலாம். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இணைப்புச் சாலை, தங்கும் மண்டபம், குளியல் அறைகள், பூங்கா மற்றும் மின்விளக்குகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கோவில் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.