திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காரில் கடத்திய காதலன்: மதுரையில் சுற்றிவளைத்த போலீசார்

2 hours ago 2

பெரம்பூர்: திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காரில் கடத்திச் சென்ற காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி மங்களபுரம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் 29ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 5 மணி அளவில், காரில் வந்த 2 பேர் அந்த இளம்பெண்ணை கடத்தி சென்றனர்.

இதுசம்பந்தமாக இளம்பெண்ணின் அண்ணன் கொடுத்த புகாரின்படி, ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கார் பதிவு எண்ணை வைத்து, கார் டிரைவர் ஓட்டேரி மங்களபுரம் கிருஷ்ணதாஸ் சாலையை சேர்ந்த அர்பத் ரஹீம் (21) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணை, அவரது காதலன் ஓட்டேரி மங்களபுரம் கிருஷ்ணராஜ் சாலையை சேர்ந்த நைனா முகமது (22) என்பவர் கடத்தி சென்றதும், அவர்களை கிளாம்பாக்கம் வரை காரில் சென்று அங்கிருந்து மதுரைக்கு பேருந்து ஏற்றிவிட்டதாகவும் கார் டிரைவர் அர்பத் ரஹீம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் மதுரை மாவட்டம் மேலூர் சோதனை சாவடியில் வைத்து மதுரை போலீசார் உதவியுடன் இளம்பெண், நைனா முகமது ஆகியோரை சுற்றிவளைத்து பிடித்து அவர்களை மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை நேற்று காலை ஓட்டேரி காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். பின்னர், கடத்தல் வழக்குப்பதிவு செய்து நைனா முகமது, கார் டிரைவர் அரபத் ரஹீம் ஆகிய 2 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  மீட்கப்பட்ட இளம்பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காரில் கடத்திய காதலன்: மதுரையில் சுற்றிவளைத்த போலீசார் appeared first on Dinakaran.

Read Entire Article