அயோத்தி:அயோத்தியில் முதலிரவில் மணமகளை கழுத்தை நெரித்துக் கொன்ற மணமகன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நகரின் கான்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாதத் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவருக்கும், ஷிவானி என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடந்தது. அன்றைய தினம் மணமகனின் வீட்டிற்கு தம்பதிகள் சென்றனர். அங்கு திருமணத்திற்குப் பிந்தைய சடங்குகள் நடந்தன. அன்றிரவு மணமகனும், மணமகளும் தங்களது அறைக்குச் சென்றனர்.
அடுத்த நாள் காலை புதுமணத் தம்பதியினர் படுத்திருந்த அறைக் கதவு திறக்கப்படவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், புதுமணத் தம்பதியினர் படுத்திருந்த அறையின் கதவை பலமுறை தட்டியும் எவ்வித பதிலும் இல்லை. அதனால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையில் இறந்த நிலையில் புதுப்பெண் ஷிவானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரதீப்பின் உடல் மீட்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் ராஜ் கரண் நாயர் கூறுகையில், ‘திருமணமான புதுமணத் தம்பதிகள், அன்றிரவு பழக்கவழக்கத்தின் படி முதலிரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் புதுமணத் தம்பதிக்குள் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அறையின் கதவு உள்தாழிட்டு பூட்டப்பட்டிருந்தது. முதற்கட்ட விசாரணையில், மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ெதாடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. திருமணத்திற்கு முந்தைய உறவுகள் தொடர்பான பிரச்னையா? அல்லது வேறு ஏதேனும் கள்ளக்காதல் விவகாரமா? என்பது குறித்து இரு தரப்பு பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.
The post திருமணமான சில மணி நேரங்களில் முதலிரவில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று கணவன் தூக்கிட்டு தற்கொலை: உத்தரபிரதேசத்தில் நடந்த சோகம் appeared first on Dinakaran.