திருப்போரூர் வனச்சரகத்தில் விலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் குடிநீர்

2 days ago 4

திருப்போரூர்: திருப்போரூர் வனச்சரகப் பகுதிகளில் கோடை வெயிலின் உக்கிரத்தில் வன உயிரினங்களின் தாகத்தை தணிக்கும் வகையில், ஆங்காங்கே உள்ள தொட்டிகளில் வனத்துறை சார்பில் குடிநீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் சாலையைக் கடக்கும் வன உயிரினங்களின் உயிரிழப்பு குறைந்துள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர் ஆகிய 3 பகுதிகளில் வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் செங்கல்பட்டு வனச் சரகத்தில் 7292.69 ஹெக்டேர், திருப்போரூரில் 5613.03 ஹெக்டேர், மதுராந்தகம் வனச்சரகத்தில் 4897.82 ஹெக்டேர் வனப்பகுதிகள் உள்ளது. திருப்போரூர் வனச்சரகத்தில் காட்டூர், செம்பாக்கம், இள்ளலூர், மாம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள வனப்பகுதிகளில் புள்ளிமான், வெளிமான், முள்ளம்பன்றி, உடும்பு, முயல், மயில், நரி, பறவைகள், பாம்புகள் என பல்வேறு வனஉயிரினங்கள் வாழ்கின்றன.

இவற்றில் மான்கள், கோடை வெப்பத்தின் உக்கிரத்தை தணிக்க அடிக்கடி குடிநீர் தேடி செம்பாக்கம், இள்ளலூர், மடையத்தூர் ஏரிகளுக்கு வருகின்றன. இவ்வாறு அவை வரும்போது சாலையை கடக்க வேண்டி இருப்பதால், அவற்றில் பல வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. இதைத் தொடர்ந்து திருப்போரூர் வனச்சரக அலுவலர் பொன்.செந்தில் உத்தரவின்பேரில், கடந்த சில நாட்களாக டிராக்டர்கள் மூலம் காலை, மாலை என இரு வேளைகளிலும் மான்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள குட்டைகள், தண்ணீர் தொட்டிகளில் வனத்துறை ஊழியர்கள் குடிநீரை நிரப்பி வருகின்றனர். இவ்வாறு வன உயிரினங்களுக்கு இரு வேளைகளிலும் தண்ணீர் ஊற்றப்படுவதால், அவை குடிநீர் தேடி சாலையை கடந்து ஏரிகளுக்கு சென்று வருவதும், வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் வெகுவாக குறைந்துள்ளன என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருப்போரூர் வனச்சரகத்தில் விலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் குடிநீர் appeared first on Dinakaran.

Read Entire Article