
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விேராதமாகவும், உரிய ஆவணங்கள் இன்றியும் தங்கி இருக்கும் வெளிநாட்டினரை போலீசார் கைது செய்து வருகிறார்கள். மேலும் பலர் போலி ஆதார் அடையாள அட்டைகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கி பல்வேறு பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கியூ பிரிவு போலீசார் மற்றும் சிறப்பு தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பல்லடம் அருகே உள்ளஆர்.எம்.நகர், டி.கே.டி.மில், குன்னாங்கல்பாளையம் பகுதிகளில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை முதல் அந்தப் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி வங்க தேசத்தினர் 26 பேர் அங்குள்ள நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்க தேசத்தினர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.