பள்ளிபாளையம், மார்ச் 1: பள்ளிபாளையம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை திருப்புளியால் குத்திய கணவன், போலீஸ் விசாரணைக்கு பயந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே வெடியரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி பைரி செட்டி(33). இவரது மனைவி சாருலதா(25). இவர்களுக்கு 6 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
குழந்தைகள் இல்லை. பைரி செட்டிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால், அடிக்கடி போதையில் வீட்டுக்கு வரும் பைரிசெட்டி, சாருலதாவின் நடத்தையில் சந்தேகித்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் மதுபோதையில் வந்த பைரி செட்டி, மனைவியை அடித்து உதைத்துள்ளார். பின்னர், வீட்டில் கடந்த திருப்புளியை எடுத்து சாருலதாவை முகம், கைகளில் என 11 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வீட்டில் தனியாக இருந்த பைரிசெட்டி, போலீஸ் விசாரணைக்கு பயந்து, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை வெகு நேரமாகியும் பைரிசெட்டி வெளியில் வராததை கண்ட அக்கம் பக்கத்தவர்கள், வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, பைரிசெட்டி சடலமாக தெங்கியதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பைரிசெட்டி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post திருப்புளியால் மனைவியை குத்திய கணவன் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை appeared first on Dinakaran.