சென்னை: “திருப்பரங்குன்றம் மலையில் உயிர் பலியிடுவது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளபோது வழக்கை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார். எனவே, மாவட்ட ஆட்சியர் பிப்.5-ம் தேதி அன்று ஒருதலைப் பட்சமாக மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் விதத்திலும் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் விதத்திலும் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 5.2.2025 தேதியிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர், உண்மைகளை மறைத்து ஒரு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை மட்டும் குறிப்பிட்டு ஒருதலைப்பட்சமாக பத்திரிகை செய்தி வெளியிட்டிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியதாகும். கந்தூரி கொடுப்பது சம்பந்தமாக திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரால் கடந்த 31.12.2024 அன்று நடந்த கூட்டத்தில், இதற்கு முன்பு கந்தூரி நடைபெற்றதாக எவ்வித ஆதாரங்களும் இல்லை என்ற காரணத்தால் புதிதாக மலைமேல் கந்தூரி கொடுக்க மறுப்பு தெரிவித்து நீதிமன்றத்தின் மூலம் உரிய பரிகாரம் தேடிக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.