திருமலை: திருப்பதிக்கு சென்ற தனியார் பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் திருத்தணியை சேர்ந்த பயணி உள்பட 4 பயணிகள் இறந்தனர். மேலும், திருவள்ளூரை சேர்ந்தவர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரியில் இருந்து திருப்பதிக்கு நள்ளிரவு தனியார் பஸ் பயணிகளுடன் சென்றது. அங்குள்ள சுற்றுலா உணவகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரியும், பஸ்சும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பஸ்சின் ஒரு பகுதி முழுவதுமாக சேதமானது.
இடிபாட்டில் சிக்கிய திருப்பதியை சேர்ந்த பார்த்தசாரதி(62), ராஜேந்திரன்(60), தனுஷ் (10) மற்றும் திருத்தணியை சேர்ந்த குமார்(55) ஆகியோர் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த திருவள்ளூரை சேர்ந்த சின்னமலை(55), சுதாகர்(50), திருப்பதியை சேர்ந்த சுப்பரத்னம்மா(42), பரத்(40) உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்த நகரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு நகரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருப்பதியில் நள்ளிரவில் விபத்து; திருத்தணியை சேர்ந்தவர் உள்பட 4 பஸ் பயணிகள் பரிதாப பலி: 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.