
திருப்பதி:
திருப்பதி கபில தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி நேற்று அதிகாலை மூலவரை சுப்ரபாதத்தில் எழுந்தருள செய்து அபிஷேகம், அலங்காரம், சுத்தி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து காலை 11.30 மணியில் இருந்து மாலை 3 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
அப்போது கோவில் கருவறை, கொடிக்கம்பம், துணைச் சன்னதிகள், கோவில் மேற்கூரை, தூண்கள், தரைதளம், பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் தாமிர, பித்தளைப் பொருட்கள் ஆகியவை தூய நீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு கோவில் வளாகம் முழுவதும் சுகந்த திரவியம் தெளிக்கப்பட்டது.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் நேற்று காலை 8 முதல் 11 மணி வரையிலும், மீண்டும் மாலை 3 முதல் இரவு 8 மணி வரையிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பிரம்மோற்சவ நாட்களில் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடக்கின்றன.