திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்

6 months ago 18

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாத சிரவண நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை புஷ்ப யாக அங்குரார்ப்பணம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை புஷ்ப யாகம் நடந்தது. அதற்கான மலர்களை கூடைகளில் சேகரித்து, திருமலையில் கல்யாண வேதிகாவில் உள்ள தோட்டப்பிரிவில் வைத்து சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.

அதன்பிறகு கூடைகளில் வைத்திருந்த மலர்களை நான்கு மாடவீதிகள் வழியாகக் கோவிலுக்குள் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு புஷ்பயாகம் நடந்தது.

புஷ்ப யாகத்தில் 17 வகையான மலர்களும், 6 வகையான இலைகளும் பயன்படுத்தப்பட்டன. அந்த மலர்களும், இலைகளும் தமிழகத்தில் இருந்து 5 டன்னும், கர்நாடகத்தில் இருந்து 2 டன்னும், ஆந்திராவில் இருந்து 2 டன்னும் என மொத்தம் 9 டன் மலர்கள், இலைகளை காணிக்கையாளர்கள் வழங்கியதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். புஷ்ப யாகத்தில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். 

Read Entire Article