
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் சர்வதேச அருங்காட்சியக தினம் (International Museum Day) 2025-ஐ கொண்டாடும் விதமாக நேற்று முன்தினம் (மே 16) முதல் இன்று (மே 18) வரை 3 நாட்கள் 'எனது பழங்கால பொருட்கள் சேகரிப்பு' என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் திறப்புவிழா நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது. இந்த கண்காட்சியினை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்த கண்காட்சியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் பல மாவட்டங்களைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் சேகரிப்போர் தங்களது அரிய சேகரிப்புகளான நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், வீட்டு உபயோக பொருட்கள், புதை படிவங்கள், ரேடியோக்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியினை மாவட்ட அறிவியல் அலுவலர் குமார் மற்றும் கல்வி அலுவலர் மாரிலெனின் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று ஒரு நாள் (18.5.2025, ஞாயிற்றுக்கிழமை) மட்டும் பார்வையாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நுழைவுக் கட்டணமின்றி பார்வையிட இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.