திருத்தணியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது மழை வெள்ளம்

6 months ago 23

 

திருத்தணி, நவ.17: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் இரவு வரை விட்டு விட்டு மிதமான மற்றும் கன மழை பெய்தது. இந்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். முருகன் மலைக்கோயிலில் மழையையும் பொருட்படுத்தாமல், சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள், மாட வீதியில் மழையில் நனைந்தபடி வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி பைபாஸ் சாலை ரயில்வே மேம்பாலம் பகுதியில் மழை வெள்ளம் அருவி போல் சாலையில் கொட்டி கரைபுரண்டு ஓடியது. மேலும், ரயில் நிலையம், ம.பொ.சி சாலை, மருத்துவமனை சாலை உள்பட முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள், பயணிகள், வியாபாரிகள் அவதி அடைந்தனர். அவ்வப்போது பெய்து வரும் தொடர் மழைக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், மேலும், பருவமழை தீவிரமடைந்து வருவதால், அனைத்து நீர் நிலைகளும் இந்த ஆண்டு நிரம்பும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

The post திருத்தணியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது மழை வெள்ளம் appeared first on Dinakaran.

Read Entire Article