திருத்தணி: திருத்தணி தொகுதியில் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள நொச்சிலி, கிருஷ்ணமராஜுகுப்பம், விகேஆர்.புரம், கீச்சலம், காப்பூர் கண்டிகை, ஜிசிஎஸ்.கண்டிகை, இஎம்ஆர்.கண்டிகை, கொத்தூர், மிட்டூர், நல்லமநாயுடு கண்டிகை உள்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாழ்வாதாரம் தேடி, கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருக்கு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நிறைய பேர் பெங்களூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
முன்னதாக, திருத்தணியில் இருந்து வேலூர் வழியாக பெங்களூருக்கு 4 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனினும், திருத்தணியில் இருந்து நொச்சிலி, அத்திமாஞ்சேரிபேட்டை, பள்ளிப்பட்டு, சித்தூர், பலமனேரி, கோலார் வழியாக பெங்களூருக்கு செல்ல அரசு பேருந்து வசதி இல்லை. இதனால் இக்கிராம மக்கள் பெங்களூருக்கு செல்ல திருத்தணி, ஆந்திர மாநிலத்தின் பலிஜ கண்டிகை பகுதிகளுக்கு சென்று, அங்கிருந்து அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே, நொச்சிலி உள்பட சுற்றுவட்டார 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், திருத்தணியில் இருந்து நொச்சிலி வழியாக பெங்களூருக்கு அரசு பேருந்து சேவையைத் துவக்க வேண்டும் என்று திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏவிடம் நேற்று மாலை 30 கிராமங்கள் சார்பில் பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜி.ரவீந்திரா, சஞ்சீவிராஜ், சுனில்குமார், லோகேஷ்ராஜ், வெங்கட்ரத்தினம் ஆகியோர் கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தினர்.
இக்கோரிக்கை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் பார்வைக்கு கொண்டு சென்று, திருத்தணியில் இருந்து நொச்சிலி வழியாக பெங்களூருக்கு அரசு பேருந்துகள் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று 30 கிராம மக்களுக்கு திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ உறுதியளித்தார்.
The post திருத்தணியிலிருந்து நொச்சிலி வழியாக பெங்களூருக்கு அரசு பேருந்து இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.