திருத்தணி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மோதி வாலிபர் பலி

2 hours ago 2

திருத்தணி: திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்றிரவு தண்டவாளத்தை கடக்க முயற்சித்த வாலிபர்மீது, அவ்வழியே வந்த சரக்கு ரயில் வேகமாக மோதியது. இதில் அந்த வாலிபர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திருத்தணி நகரில் நந்தியாற்றின் அருகில் பத்மாவதி நகரை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் கார்த்திக் (36). இவர், சென்னையில் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு வேலை முடிந்து மின்சார ரயிலில் இரவு 11 மணியளவில் திருத்தணி ரயில் நிலையத்தில் கார்த்திக் வந்திறங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு குறுக்கு வழியில் செல்ல, தண்டவாளத்தை கார்த்திக் கடக்க முயற்சித்துள்ளார்.

அப்போது அவ்வழியே வந்த சரக்கு ரயில் கார்த்திக்கின்மீது வேகமாக மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் அரக்கோணம் ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி, திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு சோகம் நிலவியது.

The post திருத்தணி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article