திருச்சி, ஜூன் 4: திருச்சி மாவட்ட பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் 39 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் எஸ்பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம். ஸ்ரீரங்கம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராசம்மாள்(70). இவர் கடந்த மே 4 அன்று போசம்பட்டியிலுள்ள தன் தம்பி பன்னீர்செல்வம் ஊரில் நடந்த திருவிழாவுக்காக சென்றவர், அங்கு வீட்டு வாசலில் மே 8 அன்று தென்னங் கீற்று கிழித்துக்கொண்டிருந்தார். பன்னீர்செல்வம் டீ வாங்கிக்கொண்டு திரும்பியவரிடம், அக்கபக்கத்தினர், உன் அக்காவின் மூக்கை அறுத்து மூக்குத்தியை பறித்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்து வயல்வெளியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். எனத் தெரிவித்தனர். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசில் பன்னீர்செல்வம் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்பி செல்வ நாகரத்தினம் இவ்வழக்கை விசாரிக்க தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போசம்பட்டி கணேசபுரத்தை சேர்ந்த குணா(27) என்பவர், ராசம்மாள் மூக்கில் அணிந்திருந்த 2 கிராம் மூக்குத்திக்காக கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து குணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், குணா மீது குண்டர் காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய எஸ்பி பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் குணா மீது, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். அதற்கான ஆணையை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குணாவிடம் நேற்று போலீசார் சார்வு செய்தனர். திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போது வரை மொத்தம் 39 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
The post திருச்சி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 39 பேர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.