
சென்னை,
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "உங்கள் தொகுதி' திட்டத்தின் கீழ் எங்கள் தொகுதி சார்ந்த 10 கோரிக்கைகள் கேட்கப்பட்டன; நாங்களும் வழங்கினோம். ஆனால் பெரும்பாலான திட்டங்களை, சாத்தியமில்லை என கூறி நிராகரித்து விட்டீர்கள். மக்கள் சார்ந்த திட்டங்களை அளிக்கும் போது அதனை நிதி அதிகம் எனக்கூறி நிராகரிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 மாதங்களுக்கு ஒருமுறை நானே தலைமை தாங்கி இத்திட்டத்தை ஆய்வு செய்கிறேன். ஆறு மாதத்திற்கு முன்பு அதிமுகவைச் சேர்ந்த விஜயபாஸ்கர் எதுவுமே தராத நிலையில், மீண்டும் மீண்டும் கேட்ட பின்புதான் தந்தார். நிதிக்குட்பட்டு சாத்தியமுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எந்த கட்சி பாகுபாடின்றி திட்டங்கள் நிறைவேற்றித் தரப்படுகிறது. எந்த திட்டத்தையும் கட்சி பாகுபாடுடன் நிறைவேற்றுவதில்லை என்று கூறினார்.
இதனை தொடர்ந்து திருச்சியில் ரூ.290 கோடி செலவில், அமைய உள்ள மாபெரும் நூலகத்திற்கு, கல்வி கண் திறந்த'பெருந்தலைவர் காமராஜர்' பெயர் சூட்டப்படும். கோவையில் நூலகம் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார்.