திருக்குறுங்குடி பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்

2 months ago 8

களக்காடு :களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள திருக்குறுங்குடி பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு நஞ்சை, புஞ்சை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தோட்டப் பயிர்களும் பயிர் செய்யப்படுகிறது. பெரும்பாலும் வட கிழக்குப்பருவ மழை காலங்களில் நெல் மற்றும் வாழை பயிர்களை பயிர் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், திருக்குறுங்குடி பெரிய குளத்துப்பாசன விவசாயிகள் வயல்களில் நடுகை போடுவதற்கு முன்னேற்பாடாக வயல் வெளிகளை சமன் செய்து அதில் தண்ணீர் தேக்கி டிராக்டர் மூலம் உழவுப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.உழவு செய்த விளை நிலங்களில் நொச்சி இலை, கொலிஞ்சி இலை,வேப்ப இலைகளை அடியுரமாக போட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே நாற்றங்காலில் நாற்று பாவப்பட்டு, நாற்றுகள் வளர்ந்து, தயார் நிலையில் உள்ளதால் இன்னும் சில நாட்களில் நாற்று நடவு பணிகளும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் திருக்குறுங்குடி பகுதியை பொறுத்த வரை பருவ மழை இன்னும் வலுப்பெறவில்லை. மழை சரிவர பெய்யாததால் பெரியகுளம் உள்ளிட்ட குளங்களில் விவசாய தேவைக்கு தண்ணீர் குறைவாகவே உள்ளது. இருப்பினும் மழையை எதிர்பார்த்து பருவ நேரத்திற்குள்ளாக விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post திருக்குறுங்குடி பகுதியில் விவசாய பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article