முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி தாலுகாவில் பக்தர்களால் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புதிய ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம், கருங்கல் மண்டபம் கட்டுமான திருப்பணியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, கே.ஆர்.பிச்சுமணி ஐயங்கார் எழுதிய ‘குணசீல மஹாத்மியம்’, சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய ‘வள்ளுவத்தில் மெய்ஞானம்’ ஆகியோரது நூல்களை வெளியிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்றுதான். அது சனாதன தர்மம் மட்டும் தான். பாரதம், ராஷ்ரீயம், தர்மம் ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. அவை ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன. திருக்குறள் ஒரு ஆன்மிக புத்தகம். ‘முக்தி’ பற்றி பேசவில்லை என கூறி, சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்க்கிறார்கள். நாம் யார் என்பதை இன்றைக்கு வெளியிட்ட புத்தகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அத்தகைய சிந்தனையை நமக்கு கல்வி பாடத்திட்டங்கள் கொடுக்கவில்லை. பாரத தேசம் ஒரு ஆன்மிக தேசம். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர். இவ்வாறு அவர் பேசினார்.
The post திருக்குறள் ஒரு ஆன்மிக புத்தகம்: ஆளுநர் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.