சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் பிரபு (எ) பிரபாகரன் (35). திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர். இவர், பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்தார். சின்னமனூர் புதுக்கிணற்று தெருவைச் சேர்ந்தவர் சுருளி (42). இவர், சின்னமனூர் மெயின்ரோடு மற்றும் மார்க்கையன்கோட்டை பைபாஸ் சாலையில் பேக்கரி கடைகள் நடத்தி வருகிறார். இவருக்கு பிரபாகரன் ரூ.18 லட்சம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த 6 மாதமாக இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பிரபாகரன், சுருளிக்கு போன் செய்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுருளி, அவரது மைத்துனர் முத்துராஜா, நண்பர் பிரபாகரன் ஆகியோர், பிரபாகரனை தேடி, சின்னமனூரில் இருந்து மார்க்கையன்கோட்டைக்கு டூவீலரில் சென்றனர். அங்கு பஸ் நிறுத்தம் பகுதியில் நின்றிருந்த பிரபாகரனுடன் மூவரும் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சுருளி உள்ளிட்ட மூவரும் சேர்ந்து, கத்தியால் அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பினர்.இதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து சின்னமனூர் போலீசார் கொலை வழக்குப்பதிந்து சுருளி, முத்துராஜா, பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சுருளியின் மனைவிக்கு பிரபாகரன் அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்ததாகவும், இதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததும் தெரிய வந்துள்ளது.
The post திமுக நிர்வாகி குத்திக்கொலை: 3 பேர் கைது appeared first on Dinakaran.