தினத்தந்தி செய்தி எதிரொலி : புதுக்கோட்டை மலையப்ப நகரில் அங்கன்வாடி மையம் முன்பு புதர்கள் அகற்றம்

2 hours ago 1

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மலையப்பநகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் அப்பகுதியை சேர்ந்த 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பலர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கன்வாடி மையம் முன்பு புதர் மண்டியும், பக்கவாட்டில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசியபடி இருந்தது.

மேலும் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் சூழ்நிலை இருந்தது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கை தொடர்பாக ''தினத்தந்தி''யில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து இச்செய்தியின் எதிரொலியாக புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகம் நேற்று காலையில் மலையப்ப நகரில் அங்கன்வாடி மையம் முன்பு சுகாதார பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியது.

இதையடுத்து மாநகராட்சி நகர் நல அலுவலர் காயத்திரி உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அங்கன்வாடி மையம் முன்பு இருந்த செடிகள், புதர்களை வெட்டி அகற்றினர். மேலும் பக்கவாட்டில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை பணியை மேற்கொண்டனர். அங்கன்வாடி மைய வளாகம் முழுவதும் சுத்தமாக தூய்மைப்படுத்தினர்.

மேலும் அங்கன்வாடி மையம் அருகே குப்பைகளை கொட்ட வேண்டாம் என அப்பகுதி பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ''தினத்தந்தி'' செய்தி எதிரொலியால் தூய்மை பணி உடனடியாக நடைபெற்றதில் அப்பகுதி பொதுமக்களும், அங்கன்வாடி மைய ஊழியர்களும், குழந்தைகளும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ''தினத்தந்தி''க்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும் அப்பகுதியினர் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Read Entire Article