உடுமலை : உடுமலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணி முடங்கியுள்ளது. இதனால் சாலைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 38 ஊராட்சிகள் உள்ளன.பெரும்பாலான ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டது.
இதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் தனி ஷெட் அமைக்கப்பட்டது.இங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து,மக்கும் குப்பைகளை உரமாகவும்,மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்தும் வந்தனர்.இந்நிலையில் பெரும்பாலான ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கி கிடக்கிறது. குறிப்பாக தேவனூர்புதூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்காக அமைக்கப்பட்ட ஷெட் வெறும் காட்சிப் பொருளாக உள்ளது.
வீடுவீடாக சென்று குப்பை சேகரிப்பு பணி முறையாக நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர். தேவனூர்புதூரில் ஆனைமலை ரோட்டில் மலைபோல் குப்பை குவிந்து கிடக்கிறது.இதன் அருகே சுடுகாடு, சுகாதார வளாகம் ஆகியவை உள்ளன. இந்த வழியாகத்தான் தோட்டசாளைகளுக்கு விவசாயிகள் சென்று வருகின்றனர்.
சுற்றுவட்டாரத்தில் உள்ள பாண்டியன்கரடு,நல்லாறு காலனி,மயிலாடும்பாறை ஆகிய கிராமங்களுக்கும் இந்த சாலை வழியாகத்தான் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
மேலும், பழநியில் இருந்து வரும் வாகனங்கள்,சுற்றுலா வாகனங்கள் இந்த வழியாக ஆனைமலை,பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப்புக்கு செல்கின்றன. எப்போதும் அதிக வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் குப்பை மலை காணப்படுவதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.
தற்போது பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மழை பெய்கிறது. இதனால் குப்பை ஈரமாகி துர்நாற்றம் வீசுகிறது.சுற்றுவட்டாரத்தில் குடியிருப்போரும், அவ்வழியே வாகனத்தில் செல்வோரும் அவதிப்படுகின்றனர். இது தவிர இறைச்சிக்கழிவுகளை சிலர் மூட்டை கட்டி சாலையோரம் வீசிச் செல்கின்றனர். மக்கும் குப்பையுடன் பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து காணப்படுகிறது.
இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது: குப்பைகள் தேக்கமடைவது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய நிர்வாகிகளிடமும் பலமுறை புகார் அளித்து விட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஒன்றிய அதிகாரிகள் ரோந்து சென்று கண்காணிக்க அரசு சார்பில் வாகனம் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் அவர்கள் ரோந்து வருவதே இல்லை.ரோந்து வந்தால்தானே ஊராட்சிகள் எப்படி இருக்கிறது என தெரியும்?
தேவனூர்புதூர் ஊராட்சியில் குவிந்துள்ள குப்பைகளை உடடினயாக அகற்ற வேண்டும். செயல்படாமல் உள்ள திடக்கழிவு மேலாண்மை பணியை முறையாக செயல்படுத்த வேண்டும்.
இதற்காக அமைக்கப்பட்ட ஷெட்டுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இதேபோல, உடுமலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குப்பை மேலாண்மை பணியை கண்காணித்து முறையாக குப்பைகளை அகற்றவும், ஊராட்சிகளை சுகாதாரமாக வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post திடக்கழிவு மேலாண்மை பணி முடக்கம் சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.