
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில், கடந்த 22ம்தேதி மதியம் தனது வீட்டில் இருந்து தேவாலயம் செல்வதற்காக நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க சங்கிலியை, அந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த நபர் பறித்துச் சென்றார். இதுகுறித்து மேற்சொன்ன பெண் அளித்த புகாரின் அடிப்படையில் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கண்டறிந்து, தங்க சங்கிலியை மீட்டு நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ் மேற்பார்வையில், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் குற்றவாளி சம்பந்தமாக தீவிரமாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த அலெக்ஸ்ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து தங்க சங்கிலி முழுமையாக மீட்கப்பட்டு, குற்றம் செய்ய பயன்படுத்திய மோட்டார் பைக் கைப்பற்றப்பட்டு, குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கண்டறிந்து, அவரை கைது செய்து, பறிக்கப்பட்ட தங்க சங்கிலி முழுமையாக அவரிடமிருந்து மீட்கப்பட்ட பணியினை செய்த, வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேஷ், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் திசையன்விளை காவல் நிலைய காவலர்களை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.