
போபால்,
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், தனது நண்பருக்கு ரூ.50,000 கடனை அடைக்க, கணவர் தனது மனைவியை "விற்றதாக" கூறப்படுகிறது. பின்னர், அவரது மனைவியை நண்பர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தார் மாவட்டம் கன்வான் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் சூதாட்டத்துக்கு அடிமையானவர். சூதாட்டத்தால் அவருக்கு ரூ.50 ஆயிரம் வரை கடன் ஏற்பட்டது. இந்த கடனை அவர் தனது நண்பர்கள் சிலரிடம் வாங்கி இருந்தார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் கடனை அடைப்பதற்காக நண்பர் ஒருவருக்கு, தனது மனைவியை விற்றுவிட்டார்.
அந்த பெண்ணை தனக்கான பாலியல் அடிமையாக நினைத்த கணவரின் நண்பர், பல முறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். கொடுமை தாங்க முடியாத அந்த பெண், அவரது பிடியில் இருந்து தப்பி வந்தார். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து இந்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் 'ஜீரோ எப்.ஐ.ஆர்' அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அதனை தார் போலீஸ் நிலையத்துக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தார் போலீசார் விசாரணை நடத்தி, அந்த பெண்ணின் கணவரையும், பாலியல் பலாத்காரம் செய்த கணவரின் நண்பரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.