
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அடக்கும் போர்வையில், காவல்துறையின் மிருகத்தனமான அத்துமீறல்களும், எண்ணற்ற லாக்-அப் மரணங்களும்தான் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் 304 கைதிகளுக்கு எலும்பு முறிவு காயங்கள் ஏற்பட்டதற்கு வழுக்கும் கழிப்பறைகளே காரணம் என தி.மு.க. அரசால் வாய்க்கூசாமல் சாக்கு சொல்லப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐந்து குற்றவாளிகளின் பற்களை உடைத்து அத்துமீறலில் ஈடுபட்டபோது, தி.மு.க. அரசு கண்மூடி வாய் பொத்தி இருந்தது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே (2021-22) மொத்தம் 109 லாக்-அப் மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 70 சதவீதம் அதிகமாகும். மேலும் காவல்துறையின் வன்முறையால் காவல்நிலையத்தில் வைத்தே கடந்த 2022-ம் ஆண்டு சென்னையில் 25 வயது இளைஞர் ஒருவரும், திருவண்ணாமலையில் 47 வயது நபர் ஒருவரும், 2023-ம் ஆண்டு தென்காசியில் 23 வயது தலித் இளைஞரும் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஒரு புறம் காவல்துறையின் அத்துமீறல் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. மறுபுறம் போதைப்பொருள் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் சாதிய வன்முறை என குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இப்படி சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கக் காரணம் காவல்துறையைத் தி.மு.க. தனது சொந்த ஏவல் வேலைகளுக்குப் பயன்படுத்துவதுதான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர், இனியாவது காவல்துறை மற்றும் குற்றவாளிகளின் அத்துமீறல்களை அடக்கி சட்டம் ஒழுங்கை சீர் செய்வாரா என்பதே மக்களிடம் எஞ்சியிருக்கும் கடைசி எதிர்பார்ப்பு. எனவே, மேடை தோறும் "அமைதிப்பூங்கா தமிழகம்" என முழங்குவதில் மட்டும் ஆர்வம் காட்டும் தி.மு.க. அரசு, முதலில் தமிழக மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க முனைய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.