
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவ விழாவும் ஒன்றாகும். தட்சணாயன புண்ணியகாலம் என அழைக்கப்படும் ஆனி பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.
முன்னதாக 6-ந் தேதி கோவிலில் விநாயகர் உற்சவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து 7-ந் தேதி காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றி விழாவை தொடங்கி வைக்கின்றனர். அப்போது அலங்கார ரூபத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். தொடர்ந்து விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.
வருகிற 16-ந் தேதி வரையில் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பரணிதரன், நிர்வாக அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.