திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மறுவூடல் திருவிழா போன்று சித்திரை வசந்த உற்சவமும் மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி சித்திரை வசந்த உற்சவம் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான வசந்த உற்சவம் கடந்த 30ம்தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. தினமும் இரவு அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் மகிழ மரத்தின் அருகே எழுந்தருள்வார். அப்போது சேடிப்பெண், சுவாமி மீது பூச்சொரியும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
அதன்படி 5ம் நாளான நேற்றிரவு பூச்சொரியும் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு 12 மணியளவில் 3ம் பிரகாரத்தில் மன்மதனை, சிவபெருமான் தேடும் ஒளிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணாமலையார் மலர் ஆடை அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது மின்விளக்குகள் அணைக்கப்பட்டு விளக்கு ஒளியில் சிவபெருமான், மன்மதனை தேடும் நிகழ்ச்சி நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல் 8ம்நாள் உற்சவத்தில் மன்மதனை, சிவபெருமான் தேடும் நிகழ்ச்சி நடைபெறும். 9ம் நாள் உற்சவத்தில் சிவபெருமானிடம் மன்மதன் சிக்கிக்கொள்வார். இதையடுத்து 10ம் நாள் உற்சவத்தில் மன்மதன் தகனம் நடைபெறும்.
விழாவின் நிறைவாக வரும் 10ம் தேதி காலை 11 மணியளவில் ஐயங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோயிலில் மண்டகபடியும், இரவு 10 மணியளவில் கோயில் 3ம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சிவாலயங்களில் மன்மத தகனம் நடைபெறும் தனிச்சிறப்பு அண்ணாமலையார் கோயிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
The post தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஒளிவு உற்சவம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.