தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவன மோசடி விவகாரம் முடக்கப்பட்ட தேவநாதனின் சொத்துக்களை முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை: தமிழ்நாடு காவல்துறை தகவல்

3 weeks ago 4

சென்னை: தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் நிர்வாக இயக்குநர் தேவநாதன் உள்ளிட்ட 7 பேர்களின் முடக்கப்பட்ட சொத்துகள் மூலம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனம் 150 ஆண்டுகள் பழமையானது. இந்த நிதி நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு முதலீடு செய்யும் பணத்திற்கு மாதம் 10 விழுக்காடு முதல் 11 விழுக்காடு வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர். இதை நம்பி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.525 கோடிக்கு மேல் முதலீடு செய்தனர். இதற்கிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு சரியாக முதிர்வு தொகை மற்றும் வட்டி கொடுக்காமல் இழுத்து அடித்து வந்தனர். மேலும், நிதி நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட 144 முதலீட்டாளர்கள் ஒன்றாக சேர்ந்து அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த ஆண்டு புகார் அளித்தனர். அந்த புகாரின் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் இருந்து பல நூறு கோடி மோசடி செய்து இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக நின்ற தேவநாதன் யாதவ், அவரது கூட்டாளிகளான குணசீலன், மகிமைநாதன், தேவசேனாதிபதி, சுதிர்சங்கர், சாலமன் மோகன்தாஸ் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் முக்கிய குற்றவாளியான நிதி நிறுவன இயக்குநர் ேதவநாதன் யாதவ் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி கைது செய்தனர்.

பிறகு தேவசேனாதிபதி, சுதிர்சங்கள் அகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் இன்று வரை தலைமறைவாக உள்ள சாலமன் மோகன் தாஸை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.மேலும், நிதி நிறுவனம் மற்றும் தேவாநாதன் யாதவுக்கு சொந்தமான 11 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.7,53,993 ரொக்கம், 180.09 கிராம் தங்கம், 84.8 கிராம் வெள்ளி, வங்கியில் இருந்த ரூ.16,17,636 பணம் 6 சொகுசு கார்கள், ரூ.280 கோடி மதிப்புள்ள அசையா சொத்து ஆவணங்கள் மற்றும் ரூ.173,72,02,248 மதிப்புள்ள பங்கு வர்த்தக முதலீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பின்னர் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி தேவாநாதன் யாதவுக்கு சொந்தமான 5 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. இதற்கிடையே தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்ததாக 5,160 முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் தேவநாதன் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகார்களின் படி மொத்த மதிப்பு ரூ.586 கோடி ஆக உள்ளது. அதன் பிறகு சிறையில் உள்ள தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். அதனை ெதாடர்ந்து இந்த வழக்கில் முதன்மை குற்ற அறிக்கை நீதிமன்றத்தல் கடந்த நவம்பர் 6ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இடைக்கால இணைப்புக்கான முன் மொழிவு பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து துரித முறையில் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 7 பேர்களின் சொத்துக்களை இடை முடக்கம் செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான தகவலை தமிழ்நாடு காவல்துறை சார்பில் பாதிக்கப்பட்ட மூதலீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவன மோசடி விவகாரம் முடக்கப்பட்ட தேவநாதனின் சொத்துக்களை முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை: தமிழ்நாடு காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article