செய்யாறு, ஜன.19: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி அமுதா(65). இவர்களது மகன் விஜயகுமார்(45), விவசாயி. இந்நிலையில் விஜயகுமார் குடும்பத்தினருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த உறவினர் இளங்கோவன்(50) குடும்பத்தினருக்கும், வீட்டுமனை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. பொங்கல் விழாவுக்காக சென்னையில் இருந்து இளங்கோவனின் மகன்கள் ஆகாஷ் (25), கமலேஷ் (20) ஆகியோர் வந்திருந்தனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி கமலேஷ், வீட்டுமனை சம்பந்தமாக விஜயகுமாரிடம் வீண் தகராறு செய்தாராம். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த கமலேஷின் தந்தை இளங்கோவன், அண்ணன் ஆகாஷ் ஆகியோர் கற்களால், விஜயகுமாரின் கண்கள் மீது தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த அவரது மனைவி பிரியா, தாய் அமுதாவையும் சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த விஜயகுமாரை உறவினர்கள் மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து அமுதா அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து இளங்கோவன், அவரது மகன்கள் கமலேஷ், ஆகாஷ் ஆகியோரை கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post தாய், மகனை தாக்கிய தந்தை, மகன்கள் கைது செய்யாறு அருகே வீட்டுமனை தகராறு appeared first on Dinakaran.