
சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாபு. இவருக்கு 6 வயதில் மகள் இருந்தார். இதனிடையே, கடந்த 2017 பிப்ரவரி 5ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை அதேபகுதியை சேர்ந்த தஷ்வந்த் என்ற இளைஞர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலை செய்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் கடந்த 2017 டிசம்பர் 2ம் தேதி தனது தாய் சரளாவை படுகொலை செய்தார். படுகொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பிச்சென்ற தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே சிறையில் அடைக்கப்பட்ட தஷ்வந்திற்கு, சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் 46 ஆண்டுகள் சிறை தண்டனையும், தூக்கு தண்டனையும் விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதனால் தஷ்வந்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டுள்ளான். தந்தை பிழற்சாட்சியாக மாறியதால் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தஷ்வந்தை செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் தஷ்வந்தை கோர்ட்டு விடுதலை செய்துள்ளது.
தாயார் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டபோதும் சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் தஷ்வந்த் தொடர்ந்து சிறையில் இருப்பான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.