தாம்பரம் சானடோரியம், அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில், வார்டுகளுக்கு செல்லும் உட்புற சாலைகள் குண்டும், குழியுமாக மோசமான நிலைக்கு மாறியுள்ளன. உள்நோயாளிகள் நடந்து செல்லக்கூட முடியாமல் கடும் அவதியடைகின்றனர். தாம்பரம் சானடோரியத்தில், 1928-ம் ஆண்டு நிறுவப்பட்ட அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, நுரையீரல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக காசநோய் (TB) மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் ஒரு முன்னோடியாக திகழ்கிறது. மொத்தம், 800-க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் நோயாளிகளுக்கு, தொற்று மற்றும் தொற்று அல்லாத நுரையீரல் நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் இம்மருத்துவமனை முக்கிய பங்கு வகிக்கிறது.
இங்கு காசநோய், எச்.ஐ.வி / எய்ட்ஸ், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD), ஆஸ்துமா, ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுக்குழாய் தளர்ச்சி, நுரையீரல் அழற்சி, திசு இடைநார் நுரையீரல் நோய்கள் (Interstitial lung Diseases), நுரையீரல் புற்றுநோய் (Lung Malignancies) மற்றும் பல்வேறு வகையான சுவாசக் கோளாறுகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. எச்.ஐ.வி மற்றும் காசநோய் சிகிச்சைக்கான சிறந்த மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, தீவிர சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை என கருதப்படும் இங்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.