
இயற்கை எழில் சூழ்ந்த மலை உச்சியில் அழகுமிகு அற்புதமான ஆலயமாக காட்சி தருகிறது, தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோவில். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் இருக்கும் இந்த ஆலயத்தில் இருக்கும் பாலமுருகனை வழிபட்டால் வாழ்வில் பல அற்புதங்கள் நடக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
தல புராணம்
பழம்பெரும் ஆலயங்கள் உருவானதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கும். அவற்றைத்தான் நாம் தல புராணம் என்கிறோம். முருகப்பெருமான் தன் ஆறாவது படைவீடான பழமுதிர்ச் சோலையில் மலைவளம் கண்டபிறகு, தாண்டிக்குடி வருகிறார். முருகன் இங்கிருக்கும்போதுதான் அகஸ்தியரின் சீடரான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என இரண்டு மலைகளை சுமந்துகொண்டு பழனி வந்து சேருகிறார். இதை அறிந்த முருகன் இந்த இரண்டு மலைகளில் ஒன்று தனக்கு இருப்பிடமாக்கிக் கொள்ள உரியது என கருதி தாண்டிக்குதித்தார். இதன் காரணமாகவே இந்த இடம் 'தாண்டிக்குதி' என்ற அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி 'தாண்டிக்குடி' ஆனது.
பன்றிமலை சுவாமிகளின் வேண்டுகோளின்படி, முருகனே கோவில் கட்டுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட நபர்களின் கனவில் தோன்றிய முருகன், கோவில் கட்டுவதற்கு தேவையான பொருட்களை கொடுக்க கூறினார். தற்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை கூட ஸ்தபதி ஒருவரின் கனவில் முருகனே சென்று கூறி அதன்மூலம் நிறுவப்பெற்றதுதான். இங்கு மூலவரான முருகன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவரின் அமைப்பே இக்கோவிலிலும் உள்ளது.
பன்றிமலை சுவாமிகள்
முருகன் இங்கிருந்துதான் பழனிக்கு சென்றிருக்கிறார். எனவே பழனிக்கு செல்பவர்கள் இங்குள்ள தாண்டிக்குடி பாலமுருகனை தரிசித்த பின் சென்றால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இங்கிருந்து பழனிக்கு தாண்டிக்குதித்துச் சென்ற முருகப்பெருமானை, 'பத்தொன்பது சித்தர்' என்று அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள் (இயற்பெயர் ராமசாமி) தாண்டிக்குடிக்கே பாலமுருகன் வடிவில் அழைத்து வந்துள்ளார்.
அவர் முருகனை அழைத்து வந்ததற்கு அடையாளமாக தாண்டிக்குடி மலையில் ஒரு ஜோதி தோன்றியது. இதனாலேயே இந்த மலை 'ஜோதி மலை' என அழைக்கப்பட்டது. இந்த ஜோதி தொடர்ந்து மூன்று நாட்கள் தெரிந்தது. அதன்பின்பு, அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, முருகப்பெருமான் மறுபடியும் தாண்டிக்குடிக்கு வந்து விட்டதற்கு அறிகுறியாக, திருவடிச்சுவடுகள் மண்ணில் பதிந்தால் எப்படி இருக்குமோ அப்படி அந்தக்கல்லில் திருவடிச்சுவடு காணப்பட்டது.
அதற்கு அடுத்தாற்போல் உள்ள பாறையில் முருகனின் வாகனமான மயில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டிருப்பது போன்ற தோற்றமும் காணப்பட்டது. இந்த தோற்றங்களை நாம் இப்போதும் பார்க்கலாம். இக்கோவில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோவிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இந்த மண்ணே இக்கோவிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு
ஆலயத்தில் நுழையும் முன்பாக அலங்கார வளைவில் ஆண்டிக்கோலத்தில் முருகப்பெருமானின் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. கோவிலில் நுழைந்ததும் முதலில் விநாயகப்பெருமானின் தரிசனம் கிடைக்கும். அடுத்து கொடி மரம், பலிபீடம் உள்ளன. அடுத்ததாக மகா மண்டபத்திற்குள் பிரமாண்டமான மயில் வாகனம், கருவறையில் இருக்கும் முருகப்பெருமானை நோக்கி உள்ளது. அர்த்த மண்டபத்தில் சன்னிதிகள் எதுவும் கிடையாது. அதற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மகா மண்டபத்தில் இருந்துதான் முருகப்பெருமானை தரிசனம் செய்ய முடியும். கருவறையில் முருகப்பெருமான், ராஜ அலங்காரத்தில் கையில் வேலோடு அற்புதமாக காட்சி தருகிறார். சண்முக கடவுளை மனதார வணங்கி விட்டு கோவிலை சுற்றி வந்தால், இடும்பன், பைரவர், நாகராஜர், நவக்கிரக சன்னிதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன. இந்த கோவில் மலை உச்சியில் இருந்து கீழ் அடிவாரத்தில் இருக்கும் தாண்டிக்குடி கிராமத்தை பார்க்கும் போது, மயிலின் வடிவத்தை போன்று தோற்றமளிக்கும். இந்த காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்து பாலமுருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பாலை பிரசாதமாக வாங்கி அருந்தினால் நம் வீட்டிலும் பாலகன் நிச்சயம் வருவான் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். தாண்டிக்குடி வந்து முருகனை தரிசித்து, பிரார்த்தனை செய்வதன் மூலம் கடன் பிரச்சினை, நோய் நொடிகளிருந்து விடுதலை, தம்பதிகள் ஒற்றுமை, குறிப்பாக மன நிம்மதி கிடைப்பதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் மலை உச்சியில் இருக்கும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்வது சிரமம் என்பதால் கோவிலில் பூஜைகள் நடைபெறும்போது அங்கு ஒலிக்கும் மணியின் சத்தத்தை கேட்டு மலை அடிவாரத்தில் இருக்கும் மக்கள் இறைவனை மனதார வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
திருவிழாக்கள்
இந்தக் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்கள் தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகும். ஆலயத்தில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இந்த ஆலயத்தை கட்டிய பன்றிமலை சுவாமிகளுக்கு கோவில் வளாகத்துக்கு உள்ளேயே தனிக் கோவில் உள்ளது. இங்கும் தினமும் பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
கோவில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு என்ற ஊரிலிருந்து தாண்டிக்குடிக்கு பேருந்து வசதி உள்ளது. அங்கு இருந்து கோவிலுக்கு 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். ஆலயத்தை சென்றடைய பேருந்து வசதி கிடையாது. ஆனால் வாடகை வாகன வசதி உள்ளது. காட்டு விலங்குகளின் தொந்தரவு இருப்பதால் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.