சென்னை: த.வெ.க கொடியில் இடம் பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பகுஜன் சமாஜ் கட்சி அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி. எங்கள் கட்சியின் சின்னம் யானை.
இதனை தேர்தல் ஆணையம் அங்கீகாரித்து உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை யாரும் பயன்படுத்த முடியாது. ஆனால், தமிழக வெற்றி கழகம் (தவெக) யானை சின்னத்தை தனது கட்சி கொடியில் பயன்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவெக கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை வந்தது. நீதிபதி விடுமுறை என்பதால் பொறுப்பு நீதிபதி வழக்கை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
The post தவெக கட்சி கொடியின் யானை சின்னம் விவகாரம் பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.