
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று ஒரு லாரி வந்தது. இந்த லாரி தொப்பூர் இரட்டை பாலம் அருகே வந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற சரக்கு வேன் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் முன்னால் சென்ற 2 கார்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார்கள் நொறுங்கின. அதில் வந்தவர்கள் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.