
மும்பை,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி கடந்த 3-ந்தேதி நடந்தது. இதில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி முதல் முறையாக கோப்பை வென்று மகுடம் சூடியது. அதற்கு மறுநாள் (4-ந்தேதி) பெங்களூரு விதானசவுதாவில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ஒரு கட்டத்தில் பி.சி.சி.ஐ. ஏதாவது செய்ய வேண்டியிருக்கும். நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. இது ஆர்சிபியின் தனிப்பட்ட நிகழ்வு. இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டுக்கு பொறுப்பு வகிக்கும் அமைப்பாக இதுபோன்ற நிகழ்வு இனி நடக்காமல் இருப்பதை பி.சி.சி.ஐ. உறுதி செய்யும்" என்று கூறினார்.