
சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த சின்ன முறுக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு கிடங்கில் இன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகிய மூவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டாசு கிடங்கில் நிலவிய பாதுகாப்பு குறைபாடுகள் தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பட்டாசு ஆலைகள் மற்றும் கிடங்குகளில் அண்மைக்காலமாக விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க பட்டாசு ஆலைகளில் பாதுகாப்புத் தணிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.