
தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக செயல்பட்டு வந்தவர் தர்மசெல்வன். இவர் கடந்த சில நாட்களுக்குமுன் தருமபுரியில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய தர்மசெல்வன், மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி. என யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என பேசினார். அவரது பேச்சு தொடர்பான காணொலி சமூகவலைதளத்தில் வைரலானது. மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோரை மிரட்டும் வகையில் தி.மு.க. பொறுப்பாளர் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தர்மசெல்வன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தர்மசெல்வன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மணி தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.