
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள மஞ்சளை ஊராட்சிக்கு உட்பட்ட ஏர்கோல்பட்டியைச் சேர்ந்தவர் ஏழுமலை. கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (23 வயது). இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தனலட்சுமி 5 மாத கர்ப்பமாக இருந்தார்.
இதனிடையே நேற்று முன்தினம் தனலட்சுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அவரை மீட்டு பெரும்பாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மேச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது தனலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஏரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏழுமலையை 2-வது திருமணம் செய்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 மாத கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.