
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அஞ்சான் கோடு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது35). இவர் வெளிநாட்டில் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உண்டு. விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த முரளி இன்று (சனிக்கிழமை) காலையில் வெளிநாட்டிற்கு செல்வதாக இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி வாங்குவதற்காக வீட்டில் இருந்து மார்த்தாண்டம் சென்றார். மார்த்தாண்டத்தில் இருந்து பிரியாணி வாங்கிவிட்டு குழித்துறை சந்திப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கனிமவள லாரி மோதியது. இதில் முரளி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.