
சென்னை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் 70 ஆட்டங்கள் கொண்ட லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றி பெற்றது.
இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்படு இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக இந்த சீசனில் சென்னை அணிக்காக ரூ.9.75 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை. 9 போட்டிகளில் விளையாடி வெறும் 7 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி அணிக்கு பின்னடைவை கொடுத்தார். இதனால் அவரை சென்னை அணியின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினிடம் ரசிகர் ஒருவர் யூடியூப் நேரலையில், 'டியர் அஸ்வின் தயவுசெய்து என் அன்பான சிஎஸ்கே குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள்' என்று விமர்சித்து கமெண்ட் செய்தார்.
அதற்கு பதிலளித்த அஸ்வின், "நீங்கள் அணி மீது வைத்திருக்கும் அன்பு எனக்கு புரிகிறது. நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. எனக்கும் அதே அன்பும் ஆர்வமும் இருக்கிறது. நீங்கள் என் கையில் பந்தைக் கொடுத்தால், நான் பந்து வீசுவேன், நீங்கள் பேட்டிங் செய்தால், நான் பேட்டிங் செய்வேன்.
நான் நிறைய கடின உழைப்பைச் செய்துள்ளேன். மேலும் நான் வேலை செய்யக்கூடிய பகுதிகள் உள்ளன, அது எனக்கு மிகவும் தெளிவாகத் தெரியும். பவர்பிளேயில், நான் அதிக ரன்களை கொடுத்துள்ளேன். ஆனால் அடுத்த முறை பவர்பிளே ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுக்காமல் விக்கெட்டுகளை வீழ்த்தும் விருப்பங்களை உருவாக்க வேண்டும். இதுதான் நான் செய்யக்கூடிய சிறந்தது.
உங்கள் எல்லோரையும் விட நான் எனது அணியை மிகவும் நேசிக்கிறேன். 2009 முதல் 2015 -ம் ஆண்டு வரை இதே அணியில் இருந்துள்ளேன். நான் இதற்கு முன்பு 7 ஆண்டுகள் இதே அணிக்காக விளையாடி நிறைய பட்டங்களையும் வென்றிருக்கிறேன். ஒரு சாம்பியன் அணியை இப்படி பார்க்கையில் எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதனால்தான் நான் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுகிறேன். ஆனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக உள்ளது" என்று கூறினார்.