மதுரை: தமிழ்நாட்டில் முதல்முறையாக 25 கி.மீ தூரத்திற்கு முதல்வர் பிரமாண்ட ரோடு ஷோவை, மதுரையில் நாளை நடத்துகிறார். தமிழ்நாட்டில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக மாவட்டந்தோறும் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், நாளை (மே 31) மாலை மதுரையில் நடக்கும் ரோடு ஷோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதுவரையில் தமிழ்நாட்டில் எங்கும் நடைபெறாத வகையில் முதல்முறையாக 25 கிமீ தூரத்திற்கு ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மறுநாள் (ஜூன் 1) மதுரை உத்தங்குடி பகுதியில் நடக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை (மே 31) காலை 11 மணிக்கு விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகிறார்.
அங்கு, மதுரை வடக்கு, மதுரை மாநகர் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் அவனியாபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலையில் 25 கிமீ தூரத்திற்கு நடக்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். முதல்வரின் ரோடு ஷோ திருப்பரங்குன்றம், மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய 3 தொகுதிகளை இணைக்கும் வகையில் நடக்கிறது.
The post தமிழ்நாட்டில் முதல்முறையாக முதல்வர் 25 கி.மீ தூரத்திற்கு நாளை பிரமாண்ட ரோடு ஷோ: மதுரையில் 3 தொகுதிகளை ஒருங்கிணைத்து நடக்கிறது appeared first on Dinakaran.