
சென்னை,
தமிழ்நாட்டில் பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள 9 துணை சிறைகள் உள்பட 19 துணை சிறைகளை நிரந்தரமாக மூடி அதனை வருவாய்த் துறையிடம் ஒப்படைக்க சிறைத்துறை டி.ஜி.பி. முன்மொழிந்து இருந்தார்.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, முசிறி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் உள்ள 14 துணை சிறைச்சாலைகளை நிரந்தரமாக மூட அரசு முடிவு செய்தது.
இதற்கான அரசாணையை உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார். நிரந்தரமாக மூடப்பட்ட இந்த சிறைகள் இருக்கும் நிலம் மற்றும் கட்டிடங்கள் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது.