கரூர்: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாலைவனமாக உருவெடுத்து வரும் கரூர் மாவட்டத்தில் அடர்ந்த வனங்களை பெருக்க மரங்களை நடவும், கரூர் பரமத்தி பகுதியை வெப்ப மண்டல பகுதியாக அறிவிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின் போது அதிக வெயில் பதிவாகும் பகுதியாக உள்ளது கரூர் பரமத்தி. வனப்பகுதி குறைவாக உள்ள கரூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கரூர் பரத்தி பகுதியில் கல்குவாரிகள், தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதாலும் வெயில் சதத்தை தொட்டு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.
இந்த வெயில் கொடுமையால் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரங்களை அகற்றியதாலும் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதேபோல மாவட்டத்தில் 33% வனங்கள் சூழ்ந்து இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டிலேயே மிக குறைவாக கரூர் மாவட்டத்தில் வெறும் 6.09% மரங்கள் மட்டுமே உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக கரூர் பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு, கால்நடைகள், தீவனங்கள் கருகிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நீரை சேமித்தால் வறட்சியை சமாளிக்கலாம் என்பதே இந்த பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.
The post தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில்: கரூர் பரமத்தியை வெப்ப மண்டல பகுதியாக அறிவிக்க கோரிக்கை appeared first on Dinakaran.