சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? என்பது குறித்து பாஜ தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழ்நாடு பாஜவின் 13வது தலைவராக தேர்வான நயினார் நாகேந்திரன் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அவருக்கு பாஜ சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பரிவட்டம் கட்டி செண்டை மேளம் முழங்க நயினார் நாகேந்திரனுக்கு பாஜவினர் வரவேற்பு அளித்தனர். வரவேற்பை பெற்று கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தார். பின்னர் அவர் தலைவராக பொறுப்பேற்று கொண்டார். அவரை பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையும், எச்.ராஜாவும் தலைவர் நாற்காலியில் அமர வைத்தனர்.
பொறுப்பேற்ற பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், எங்கள் கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது எங்கள் கட்சியின் தேசிய தலைமை தான். அன்றைய சூழலில் உள்துறை அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து முடிவு செய்வார்கள். ஆட்சியில் பங்கு என்பதை அவர்களே பேசிக் கொள்வார்கள் என்றார். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கடைசி வரை நன்றியுடன் இருப்பேன்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கியுள்ள காங்கிரசுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும். மிகப்பெரிய ஊழல் கட்சி என்று சொன்னால் அது காங்கிரஸ் கட்சிதான். பெண்கள் குறித்து இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பாஜ மகளிர் அணியினர் போராட்டம் நடத்துவார்கள். இந்த போராட்டங்கள் தொடர்பான தேதியும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படும்.
The post தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? பாஜ தேசிய தலைமைதான் முடிவு செய்யும்: – நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.