
சென்னை,
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை தொடங்கினாலும், தற்போது பருவமழையின் தீவிரம் குறைந்து இருப்பதாலும், வறண்ட காற்று ஊடுருவி இருப்பதாலும் கோடை காலம் போல வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியிருந்தது. அதில் அதிகபட்சமாக வேலூரில் 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்) வெப்பம் பதிவானது.
அதற்கடுத்தபடியாக, ஈரோடு 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்), மதுரை விமான நிலையம் 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்), சென்னை மீனம்பாக்கம் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), திருச்சி 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), திருத்தணி 100.4 டிகிரி (38 செல்சியஸ்), பரங்கிப்பேட்டை 100.4 டிகிரி (38 செல்சியஸ்), நாகப்பட்டினம் 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்) ஆகிய இடங்களிலும் 100 டிகிரியை தாண்டியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அடுத்த ஒரு வாரத்துக்கும் தமிழ்நாட்டில் சில இடங்களில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பசலனத்தால் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 12-ந் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, மீண்டும் தென் மேற்கு பருவமழையை தீவிரப்படுத்த உள்ளது.