தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி கோரி ஒன்றிய அமைச்சரிடம், அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனு

2 hours ago 2

சென்னை: தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி கோரி ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவிடம் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனு அளித்தார்.

தமிழ்நாடு அரசின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(12.02.2025), புதுதில்லியில், ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை சந்தித்து, தமிழ்நாடு அரசின் பல திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி கோரி கோரிக்கை மனு அளித்தார். இந்நிகழ்வின்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, உடனிருந்தார்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில், 1,50,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தொழில்துறை கொட்டகைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனும் தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பை வெளியிட்டமைக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல். வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், ஏப்ரல் 2025 உடன் முடிவுக்கு வரவுள்ள, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) மற்றும் மாநில வல்லுநர் மதிப்பீட்டுக் குழு (SEAC) ஆகியவற்றின் மறுசீரமைப்புக்கான அரசின் முன்மொழிவின் மீது விரைந்து அறிவிக்கை வெளியிடுமாறும் நிதியமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விரைவான அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக ஒரு கூடுதல் மாநில வல்லுநர் மதிப்பீட்டுக் குழு (SEAC 2) அமைக்க ஏற்கெனவே அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு கருத்துருவை சமர்ப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முன்மொழிவுக்கு விரைந்து அனுமதி வழங்குவதாக ஒன்றிய அமைச்சர் உறுதியளித்தார்கள்.

மேலும், இக்கலந்துரையாடலின் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர மற்றும் வன சுற்றுச்சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான பசுமைக் கவசத்தை உருவாக்குவதற்கான புதிய திட்டத்திற்கு காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல்திட்டம் மற்றும் பசுமை இந்தியா இயக்கம் ஆகியவற்றின் கீழ் ரூ.27.53 கோடிக்கு அனுமதி வழங்குமாறு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகத்திடம் கோரப்பட்டது. இத்திட்டம் இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் மாவட்டத்தில் பல கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் இடையகப் பகுதியிலிருந்து. தெங்குமரஹாடா கிராமத்தில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கு தேவைப்படும் ரூ.74.4 கோடி ரூபாயை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணைய (CAMPA) நிதியிலிருந்து வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு கருத்துரு சமர்ப்பித்துள்ளது. அந்தப் பகுதியில் புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், அடிக்கடி ஏற்படும் மனித வனவிலங்கு மோதல்கள் உள்ளூர் சமூகத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதையும் கருத்தில் கொண்டு. இத்திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோரிக்கை மனுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மாநில அரசின் முயற்சிகளுக்கு தனது அமைச்சகத்தின் ஆதரவை வழங்குவதாக ஒன்றிய அமைச்சர் உறுதியளித்தார்கள். இந்த சந்திப்பின் போது ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சகத்தின் செயலாளர் தன்மய் குமார், மற்றும் கூடுதல் செயலாளர் நரேஷ் பால் கங்வார். மற்றும் வனத்துறை டைரக்டர் ஜெனரல் சுஷில் குமார் அவஸ்தி. ஆகியோர் உடனிருந்தனர்.

The post தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி கோரி ஒன்றிய அமைச்சரிடம், அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Read Entire Article